Wednesday 16 September 2020

நீட் தேர்வு யாரால் வந்தது?

 நீட் தேர்வு யாரால் வந்தது? 


முழுமையான விளக்கம் 👇


 கலைஞர் தேர்தல் அறிக்கையிலும், 2006ல் முதலமைச்சரானவுடன் தனது அரசின் ஆளுநர் உரையிலும்,  பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் நிதிநிலை அறிக்கையிலும் “நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும்” என்று அறிவித்தார். 


 அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர்  அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தார். அந்த கமிட்டி அளித்த அறிக்கையை ஏற்று, 6.12.2006 அன்று ஒரு மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து (மசோதா எண்: 39/2006) நிறைவேற்றி- நுழைவுத் தேர்வை சட்டம் மூலம் ரத்து செய்தார். இந்த மசோதாவை மத்திய அரசுக்கு  அனுப்பி 3.3.2007 அன்று குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்றது திமுக ஆட்சிதான்.


 இதை எதிர்த்து தொடரப்பட்ட “அஸ்வின் குமார்” வழக்கில் அந்தச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வெளிவந்ததும் திமுக ஆட்சியில்தான். 


 பிறகு அதன் மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றமே நிராகரித்து- தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்ததும் கழக ஆட்சி இருந்தபோதுதான். 


 பிறகு 2012 இல்தான் இந்திய மருத்துவ கவுன்சில் நீட் தேர்வை அறிவித்தது. உடனே தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் அதை எதிர்த்தன. அந்த வருடம் தேர்வை நடத்தவில்லை. அதன் பிறகு மத்திய அரசு முதன் முதலில் மே 5 2013 இல் நீட் தேர்வை அறிவித்தது. கலைஞர் எதிர்த்ததால் விருப்பப்படும் மாநிலங்கள் சேரலாம், கட்டாயமில்லை என அறிவித்தார் கபில் சிபல்.


 அதை எதிர்த்து 115 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜூலை18, 2013 இல் உச்சநீதிமன்றம் NEET தேர்வுக்கு தடை விதித்தது.


 2014 ல் ஆட்சிக்கு வந்த BJP NEET விவகாரத்தில் தீவிரமாக இறங்கியது. 2016 ஏப்ரல் 11 ல் ஐந்து நபர்கள் அரசியலாசன பெஞ்ச் மத்திய அரசுக்கு நீட் தேர்வை அனுமதித்து உத்தரவிட்டது. காங் கொண்டுவந்த Neet ல் விருப்பப்பட்ட மாநிலத்துக்கு மட்டுமே என்ற சரத்தை நீக்கி அனைத்து மாநிலத்திற்கும் என கட்டாயமாக்கிய புது வரைவு நகலை தயாரித்த Bjp அரசு அதை தாக்கல் செய்து உச்சநீதிமன்ற ஒப்புதலையும் பெற்றுவிட்டது காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்ட நீட் தேர்வை தொடர்ந்து போராடி உச்சநீதிமன்ற அனுமதி பெற்றது மோடியின் BJP அரசுதான். 



 2016 இல் ஜெ ஆஸ்பத்திரியில் இருந்தபோது  நவம்பர் 23- அன்று மத்திய BJP அரசு நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறும் என அரசாணை பிறப்பிக்கிறது


மீண்டும் நீதிமன்றத்தில் அனைத்து மாநிலத்திற்கும் நீட்டை கட்டாயமாக்கி உச்சநீதி மன்றத்தில் நீட் மசோதா மனுதாக்கல் செய்து உத்தரவு பெற்றது மோடியின் BJP அரசு நாள் 2016 ஏப்ரல் 11. தமிழகஅரசின் நீட் மசோதாவை குடியரசுதலைவருக்கு அனுப்பாததும் BJP மோடி அரசே.



 அதிமுகவின் துரோகம்


 "நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விதிவிலக்கு கேட்டு இரண்டு மசோதாக்கள் 01.02.2017 சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசு அனுப்பிய 2 சட்ட மசோதாக்களும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி கிடைத்தன. மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நிராகரித்தும் ஜனாதிபதி 2017 செப்டம்பர் 18-ந்தேதி உத்தரவிட்டார். அதன்பிறகு அந்த 2 சட்ட மசோதாக்களும் 2017 செப்டம்பர் 22-ந் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. திருப்பி அனுப்பப்பட்ட இந்தக் கடிதங்கள் தொடர்பாக 21 மாதங்களாக சட்டப்பேரவையிலோ வேறு எங்குமோ எந்த தகவலும் தெரிவிக்காமல் மூடி மறைத்தது அதிமுக அரசு. 


BJP யினரும் வாயை திறக்கவில்லை சட்டசபையில் அப்போதே உண்மையை சொல்லியிருந்தால் ஆறு மாதத்திற்குள் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்திட முடியும் என 201வது விதி கூறுகிறது. 


 பிரின்ஸ் கஜேந்திரபாபு என்பவரால் நீட் தொடர்பான நீதிமன்ற வழக்கு ஒன்று 6 ஜூலை 2019ல் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில்தான் சட்டசபை தீர்மானம் திருப்பி அனுப்பப்பட்ட விபரத்தை மத்திய அரசு வக்கீல் வெளிட உண்மை வெளியே தெரிந்தது. கடைசிவரை உண்மையை அதிமுக வெளியே சொல்லவேயில்லை 21 மாதங்களாக உண்மையை மறைத்த அதிமுக அரசின் துரோகத்தை மன்னிக்க முடியுமா? 



 ஸ்டாலின் அறிக்கை நாள் 12,ஜூலை 2019👇


 நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மீது பழிபோடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை ‘நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுகதான். எதிர்ப்பு எழுந்ததால் பழியை எங்கள் மீது போடுகிறார்கள்’ என்று முதலமைச்சர் பழனிசாமி, பச்சைப் பொய் ஒன்றை கொஞ்சமும் கூசாமல் திரும்பத் திரும்பச் சொல்லி வருவதற்கு திமுக  சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 


 நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்தது முதலமைச்சராக இருந்த கலைஞர்தான். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்ததோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நீட்  தேர்வுக்கு தடையும் பெற்றார்.


 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தபோதே நீட் தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது. ஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் பாஜக ஆட்சியும் இருந்தபோதுதான் நீட் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு  தாக்கல் செய்யப்பட்ட- அந்த வழக்கில் முழு விசாரணை நடைபெறும் முன்பே, நீட் தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டு, இன்றைக்கு நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. 


 நீட் மசோதாவிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று 2017ல் மசோதா நிறைவேற்றப்பட்டும், குடியரசு தலைவர் ஒப்புதல் பெறமுடியாமல் நீட் தேர்வை தமிழகத்தில் அமல்படுத்தியது அதிமுக ஆட்சிதான். நீட் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட பிறகும்- 21 மாதங்கள் அதை மறைத்து- அரசியல் சட்டப் பிரிவில் “வித்ஹெல்டு” என்ற வார்த்தையின் அர்த்தம் கூடத் தெரியாமல் சட்டமன்றத்திற்கு தவறான தகவலை தந்து கொண்டிருப்பதும் அதிமுக  அமைச்சர்களும், முதலமைச்சரும்தான் ஏன் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையிலேயே நீட் தேர்வு குறித்து பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியது. ஆறு மாதங்களுக்குள் மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பும் அதிகாரத்தையும் தாரைவார்த்து விட்டு- பாஜவின் “நீட் தேர்வு” மோகத்திற்கு கைகொடுத்து தறிகெட்ட ஆட்சி நடத்திக் கொண்டிருப்பது முதலமைச்சர் பழனிசாமிதான்


.   ஆகவே நீட் தேர்வில் அதிமுக ஆட்சியின் பச்சைத் துரோகத்தை முழுப் பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைப்பதற்காக, தி.மு.க. மீது “கோயபல்ஸ்” பிரசாரத்தில் ஈடுபடும் முதலமைச்சரும், அவரது “சுகாதார” மற்றும் “சட்ட” அமைச்சர்களும்  தமிழகத்தின் “சாபக்கேடுகள் “ என்றே எண்ணத் தோன்றுகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று கொள்கை முடிவு எடுத்தது எங்கள் அம்மாதான்” என்கிறார்.


 ஆனால் “பிரியதர்சினி” என்ற மாணவி போட்ட வழக்கில், அந்தக் கொள்கை முடிவு எடுத்த 9.6.2005  தேதியிட்ட அரசு ஆணை, ஜெயலலிதா ஆட்சியிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை மறைத்து விட்டார். இந்த அடிப்படை தகவல்கள் கூட சுகாதாரத்துறை  அமைச்சராக இருப்பவருக்கு தெரியவில்லை; அல்லது தெரிந்திருந்தும் அரசியல் காரணங்களுக்காக மக்களைத் திசை திருப்புகிறார். 


 ஆகவே நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததும் திமுக ஆட்சிதான். நுழைவுத் தேர்வை சட்ட பூர்வமாக ரத்து செய்து, இன்றைக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை  நடைபெறக் காரணமாக இருந்ததும் திமுக ஆட்சிதான் என்பதை முதலமைச்சருக்கும், வாய்க்கு வந்தபடி பொய் சொல்லி அரசியல் வாழ்க்கை நடத்தும் அமைச்சர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இனிமேலாவது “வடிகட்டிய பொய்யை” தயக்கமில்லாமல் வழங்கி, தங்கள் மீதுள்ள கறையை அதிமுக அரசு நீட் தேர்வு மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க, திமுக மீது  மீண்டும் மீண்டும் பழிபோடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்


 https://m.dinakaran.com/article/News_Detail/509782/amp