Saturday, 23 February 2019

கொங்கு வேளாளர் சமுதாயத்தை தலைநிமிர செய்த கலைஞரை மறந்த கொங்கு வேளாளர்கள்

கொங்கு வேளாளர் சமுதாயத்தை தலைநிமிர செய்த
கலைஞரை மறந்த கொங்கு வேளாளர்கள்



1975ல் முதல்வர் கலைஞரின் அறிவிப்புதான் இருண்டு கிடந்த கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கு விடிவெள்ளி ஆனது. அனைத்து உட்பிரிவுகளையும் உள்ளடங்கிய கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து தெளிவான அரசாணையாக 16.05.1975 அன்று (பு.ழ.ஆ.ள. ழே 371.னவ.16.05.1975) கலைஞரின் தமிழக அரசு வெளியிட்டது.
அதன் பிறகுதான் கொங்கு வெள்ளாளர் இனத்தவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகள், மருத்துவம், பொறியியல் போன்ற கல்லூரிகளில் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடும் கிடைக்க ஆரம்பித்தது. கொங்கு வேளாளர் சமுதாயம் புதிய அத்தியாயம் காணத் தொடங்கியது. ஒரு சமுதாயம் அடுத்த நிலைக்கு முன்னேறி இருக்கிறது. துரதிர்ஷடவசமாக இந்தப் பகுதி மக்கள் வாக்களிக்காமல் தான் கலைஞர் தொடர்ந்து ஆட்சியை பறிகொடுத்தார் என்பதுவும் மிகவும் வருத்தத்திற்குரியது.
கொங்கு வேளாளர் மட்டுமல்ல, தமிழகத்தின் பிற சாதி மக்களுக்கும் இட ஒதுக்கீட்டில் பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்தவர் கலைஞர். ஒரு மாநில வளர்ச்சிக்கு சமூகநீதி எவ்வளவு முக்கியமானது என்பதை 60-70 களிலேயே உணர்ந்து செயல்பட்டவர் கலைஞர்
1) கொங்கு பகுதியில் வேளாண்மையை செழிக்கச் செய்ய பரம்பிக்குளம்-ஆழியாறு, வட்டமலைக் கரை, நல்லதங்காள் ஓடை திட்டங்களின் விரிவாக்கங்களை  கலைஞர் நிறைவேற்றினார்
 2) 1967 – 76 ஆட்சியின் காலக்கட்டத்தில் கொங்கு மண்டலத்தில், கோவையில் ஒரு சில பெரிய தனியார் தொழில் நிறுவனங்கள் மட்டுமே உண்டு.
பின்னலாடையினால் திருப்பூர் தொழில் நகரமானது பின்னாளில் தான்.
ஒட்டு மொத்த கொங்கு மண்டலமே விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்தது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இல்லை. சென்னைக்கோ, வெளி மாநிலங்களுக்கோ செல்ல வேண்டிய நிலைதான்.
கொங்கு பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட கவுண்டர்கள் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தனர்.
1955 – ஆம் ஆண்டு திரு. காகா கலில்கார் தலைமையில் அமைக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு கமிசன் அறிக்கையில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் வகுப்பினர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப் பரிந்துரை செய்திருந்தது.
தமிழ்நாட்டில் மூன்று பெரிய சமுதாயமான கொங்கு வேளாளர், வன்னியர், முக்குலத்தோர், ஆகியோர் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் சமுதாயமாகும்.
அதில் வன்னியர், முக்குலத்தோர் வகுப்பினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர். ஆனால் கொங்கு வேளாளரை மட்டும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை.
அதனை தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு வெள்ளக்கோவில் சட்டமன்ற உறுப்பினரான மிசா சாமிநாதன், தன்னுடன் பலரையும் சேர்ந்துக் கொண்டு அந்தக் கோரிக்கையை முன் வைக்கிறார்.
1975ம் ஆண்டு கலைஞர், கொங்கு வெள்ளாளர் சமுதாயத்தை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது சமுதாய வரலாற்றில் யாரும் மறக்க முடியாத நிகழ்வாகும்.
3)   தேர்வாணையக் குழுவில் (TNPSC) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் பதவி இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் மிகப் பெரிய சமுதாயமான கொங்கு வெள்ளாளருக்கு 1929 ஆம் வருடத்தில் இருந்து 1974 ஆம் வருடம் வரை ஒரு முறை கூட ஒரு உறுப்பினர் பதவி தரப்படவில்லை.
அந்த கோரிக்கைக்காக முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அன்றைய முதல்வர் கலைஞர் அக்கோரிக்கையை மனமார ஏற்று கொண்டார்.
அதன்படி தமிழ்நாடு தேர்வாணை குழு உறுப்பினராக கொங்கு வேளாள சமுதாயத்தைச் சேர்ந்த திரு ஏ. பழனிசாமி அவர்களையே கலைஞர் அரசு நியமித்தது. அவர் 26 .06 .1974 அன்று அப்பதவியை ஏற்றுக் கொண்டார். கொங்கு வெள்ளாளர் சமுதாயத்தின் 44 ஆண்டுகால கனவு நினைவாகியது. அதன் பிறகுதான் குரூப்-1 தேர்வில் அச்சமுதாயத்தினர் தேர்வாகத் தொடங்கினார்கள்.
கார்த்திகேய சிவசேனாபதி
By Antony Parimalam

Tuesday, 19 February 2019

கலைஞரால் தமிழக பெண்கள் அடைந்த நண்மைகள் எண்ணில் அடங்காது. 

கலைஞரால் தமிழக பெண்கள் அடைந்த நண்மைகள் எண்ணில் அடங்காது.

ஆனால் அவர்கள் அதனை அறிவார்களா என்பதே மிகப்பெரிய கேள்வி

(1)

ஆட்சிக்கு வரும் முன்பே கலைஞரது கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும் மேடை முழக்கங்களும் பெண்ணுரிமையை பெரிதும் பேசியதை நாம் அறிவோம்

 (2)
விதவை என்ற சொல்லை மாற்றி கைம்பெண் என்று அழைக்கத் தொடங்கியவர் கலைஞர்.

ஆணைப் போலவே பெண்ணுக்கும் அனைத்திலும் சம உரிமை உண்டு என்பதை உணர்த்திய அவர் பெண்களின் மறுமணத்திற்கு பெரிதும் ஆதரவளித்தார்


(3)
வரதட்சணை நோய்க்கு மருந்திடும் வகையிலும் அதே வேளையில் பெண்கள் குறைந்த பட்ச கல்வியாவது கற்க வேண்டும் என்ற நோக்கிலும் 8 -ம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டமொன்றை ஏற்படுத்தினார்.


(4)
கலைஞரது ஆட்சிக் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன


(5)
சொத்துரிமையில் ஆணுக்கு நிகரான சம பங்குரிமை பெண்களுக்கு உண்டு என்பதை சொத்துரிமைச் சட்டம் மூலம் நிலை நாட்டினார் கலைஞர்


(6)
 உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித ஒதுக்கீடு பெண்களுக்கு என்பதை உறுதி செய்தார்.


(7)
 தாய்மை அடைந்த பெண்களுக்கு உதவிட நிதி உதவியும் வழங்கினார்.


(8)
பெண் குழந்தை பிறப்பு முதல் இறுதிக்காலம் வரை சமூகப் பாதுகாப்புடன் வாழ வழிவகை செய்தவர் கலைஞர்.


(9)
 மகளிருக்கான இலவச பட்டப்படிப்பு திட்டம் மூலம் பெண் கல்வியை மேம்படுத்தினார்.


(10)
 கல்வியை மேம்படச் செய்ததோடு மட்டுமல்லாது அரசுப் பணியில் அவர்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடும் அளித்தார்.


(11)
 'பெண்கள் ஆணையதிற்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டு அது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதும் கலைஞரால்தான்


(12)
பெண்கள் மீதான வன்முறைகளை களைவதற்கும் குறைப்பதற்குமான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது.

(13)
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு தனிப் பள்ளிகளும் விடுதிகளும் அரசால் நடத்தப்படுவது போல இஸ்லாமிய பெண் குழந்தைகளுக்கு விடுதி வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றியவர் கலைஞர்

 (14)
கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.

(15)
திருமண நிதி உதவி திட்டத்தில் நிதியை உயர்த்தி வழங்கினார்


(16)
திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டது. அவர்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்தார்


(17)
பேரவையில்  டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் படத்தை புதிய சட்டப் பேரவையில் திறந்தார்.


 (18)
பெண்கள் மட்டுமே கல்வி பயிலும் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களாகவும் பெண்களே இருக்கவேண்டும் என்பதை உறுதிப் படுத்தியவர் கலைஞர்

(19)
 கலைஞர்தான் அரசுப் பணியில் 33 % பெண்களுக்கான இட ஒதுக்கீடாக கொண்டுவந்தார்.


 (20)
இன்று பெண்கள் குடும்பத்தில் தங்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று உரிமையோடு கேட்பதற்கு காரணமே கலைஞர்தான்.

சொத்து குறித்து பேசும் பெண்கள் இன்று சொத்துரிமை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டை குறிப்பிட்டே தங்களது வாதங்களையும் முன் வைக்கின்றனர்.


(21)
கலப்பு திருமணம் செய்யும் தம்பதியரில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரின் பிரிவுக்கான முன்னுரிமை வழங்கப்பட காரணம் கலைஞரே



Tuesday, 15 January 2019

தமிழர் கண்ட கால அளவீடும் தை மாதம் தமிழ் புத்தாண்டான  வரலாறும்*

தமிழர் கண்ட கால அளவீடும் தை மாதம் தமிழ் புத்தாண்டான  வரலாறும்*

பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை. திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள். பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.



சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது. சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். "நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி"எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. "திங்கள் முன்வரின் இக்கே சாரியை" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.



மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேவைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும். இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவைச் சொல்லும்போது இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி என்கிறார் தொல்காப்பியர்.



"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல்)


காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு

ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும். பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்குமுறையை பின்னாளில் ஆரியர்கள் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப்போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும் வானியல் கலையையும் ஐந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது. இந்தக் குழப்பத்தை நீக்க ஐந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.



சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் என பல்வேறு சமயத்தைத் தழுயிய அந்த ஐந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணங்களும் சான்றுகளும் இருக்க்கின்றன. தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியன்களில் காணப்பெறும் சான்றுகள் சில:-



1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை



2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை



3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு



4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு



5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை



தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன. இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே. இப்படியும் இன்னும் பல அடிப்படை காரணங்களாலும் தை முதல் நாளை ஐந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.



'பத்தன்று நூறன்று பன்னூ றன்று

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''



என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.



தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத்தாரின் தாகுதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானியல் கலையை – ஐந்திரக்(சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப்படுத்த முடியும்.


சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு

தமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது. அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார். அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.



ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார். 'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா?  என வேண்டி நின்றார்.



பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார். அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது. இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.



பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக, இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

நன்றி

-இலக்கியன்

Monday, 14 January 2019

தை முதல்நாளே தமிழ் புத்தாண்டு தொடக்கம்

தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளை அழிப்பதிலும் திரிப்பதிலும் ஆரியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மாற்றி, சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று திரித்து, சமஸ்கிருத பெயரைத் தமிழ் ஆண்டின் பெயர் என்று திணித்து, தமிழர் பண்பாட்டை அழிக்கின்றனர்.


தமிழர்கள் நாள், மாதம் ஆண்டுக் கணக்கீட்டை உலகுக்கு முதன்முதலில் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டுக் கொடுத்தவர்கள்.


காலையில் சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற ஆகும் காலம் ஒரு நாள்.
மாதம் என்பதற்குத் திங்கள் என்று ஒரு சொல் உண்டு. திங்கள் என்றால் நிலவு. நிலவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் திங்கள் என்ற பெயர் மாதத்திற்கு வந்தது.
முழுநிலவு தோன்றி மீண்டும் முழு நிலவு தோன்ற ஆகும் காலம் ஒரு மாதம்.



அதேபோல் ஆண்டு என்பது சூரியன் இருப்பை வைத்துத் தமிழர்களால் கணக்கிடப்பட்டது. சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடகோடி முனைக்குச் செல்ல ஆறு மாதம். அது மீண்டும் தென்கோடி முனைக்கு வர ஆறுமாதம். ஆக, தென்கோடி முனையில் தோன்றும் சூரியன் மீண்டும் தென்கோடி முனையை அடைய ஆகும் காலம் ஓர் ஆண்டு என்று கணக்கிட்டனர். (சூரியன் நிலையாகவுள்ளது என்பது அறிவியல் உண்மை. ஆனால் பார்வைக்கு அது இடம் மாறுவதாய்த் தோன்றுவதை வைத்துக் கணக்கிட்டனர்.)


உலகில் முதன்முதலில் ஆண்டுக் கணக்கீட்டை சூரியன் இருப்பை வைத்துக் கணக்கிட்டவர்கள் தமிழர்கள். பின் இதனைப் பின்பற்றியே ஆங்கிலேயர்கள் ஆங்கில ஆண்டை அமைத்தனர்.
சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாளே தமிழ் ஆண்டின் பிறப்பு. தமிழரின் புத்தாண்டு அன்றுதான். அந்த நாளே பெரும் பொங்கல் எனப்படும் சூரியத் திருநாள்.



ஆனால், இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய இத்தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல்நாள் என்று மாற்றி, அதற்கு ஒரு புராணக் கதையை எழுதிச் சேர்த்து, தமிழ்ப் பண்பாட்டை ஒழித்து, ஆரியப் பண்பாட்டை, தமிழ்ப் புத்தாண்டிலும் புகுத்தினர்.
அதாவது, நாரதர் கிருஷ்ணனைப் பார்த்து, “நீர் அறுபதானாயிரம் கோபிகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’’ என்று கேட்டார். அதற்கு கண்ணன், “நான் இல்லாப் பெண்ணை உனக்கு உரியதாக்கிக் கொள்’’ என்று கூற, நாரதர் எல்லா வீடுகளிலும் சென்று பார்த்தபோது, கண்ணன் இல்லாத வீடு கிடைக்காததால், கண்ணன் மீதே காமங்கொண்டு, “நான் பெண்ணாய் மாறி உங்களைப் புணர வேண்டும்’’ என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்த, “யமுனையில் குளித்துவிட்டு வாருங்கள்’’ என்று நாரதரைப் பார்த்து கண்ணன் கூற, யமுனையில் குளித்த நாரதர் அழகிய பெண்ணாக மாறினார். அந்த அழகில் மயங்கிய கண்ணன், பெண்ணாயிருந்த நாரதரை அறுபது ஆண்டுகள் புணர்ந்து, அறுபது பிள்ளைகளைப் பெற்றார். அவர்களே, பிரபவ தொடங்கி அட்சய முடிய அறுபது ஆண்டுகள் என்று ஆபாசமான அறுவறுப்பான ஒரு புராணக்கதையைச் சொல்லி, இவற்றைத் தமிழாண்டுகள் என்றனர். தமிழே இல்லாத இந்த அறுபது ஆண்டுகளைத் தமிழ் ஆண்டு என்று திணித்தனர்.



தமிழாண்டு என்றால் தமிழிலல்லவா ஆண்டுப் பெயர் இருக்கும். சமஸ்கிருதத்தில் உள்ள 60 ஆண்டும் எப்படித் தமிழாண்டாகும். சித்திரை தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது ஆரியர் பண்பாட்டின் திணிப்பு. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதே தமிழரின் மரபு!



அடுத்து, அறிவியல் அடிப்படையில், வேளாண் விளைச்சலுக்கு முதன்மைக் காரணமாய் இருக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பொங்கல் திருநாளை மகரசங்கராந்தி என்று மாற்றினர் ஆரியப் பார்ப்பனர்கள்.



“சூரியன் தனுசு இராசியில் சஞ்சரிக்கும் காலம். இது தேவர்களுக்கு விடியற்காலம். மகா சங்கிரமே சக்தி எனும் சக்தி தட்சிணாயணம் ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்த நிலையில், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கியதனால், தை மாதம் முதல் நாள், அக்காலத்து விளைந்த பொருட்களைக் கொண்டு சூரியனை வழிபட்டனர். இதுவே மகர சங்கராந்தி என்று கூறி, பொங்கல் திருநாளை மகா சங்கராந்தி யென்று மாற்றினர்.



சூரியத் திருநாளை மகர சங்கராந்தி என்று மாற்றியதுபோல, மழைத் திருநாளை போகி என்று மாற்றினர்.



மழைத் திருநாள் போகிப் பண்டிகையாக்கப்பட்டது
தமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை தொன்மைக் காலத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பயன்படுகின்றவற்றை, தங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் தருகின்றவற்றை மரியாதையின் பொருட்டும், நன்றி செலுத்தவும் வணங்கினர்.
அதனடிப்படையில் மனிதர்களின் இன்பத்திற்கும், இனப் பெருக்கத்திற்கும் காரணமாய் அமைந்த ஆண் பெண் உறுப்புகளை இணைத்து நன்றியும், மரியாதையும் செலுத்தினர். அதுவே பின்னாளில் ஆரியர்களின் திரிபு வேலையால், புராணம் புனையப்பட்டு, சிவலிங்க வழிபாடாக்கப்பட்டது.



அதேபோல் குலப் பெரியோர், வீரர், பத்தினிப் பெண்டிர், நிலத் தலைவர் வழிபாடெல்லாம் அம்மன், முருகன், மாயோன், வருணன் வழிபாடுகளாக மாற்றப்பட்டன.


இதே அடிப்படையில் வேளாண் விளைவிற்குத் துணைநிற்கும் மழை, சூரியன், மாடு, உழைப்பாளிகளை மதிக்க, நன்றி சொல்ல தமிழர்கள் கொண்டாடிய அறிவிற்குகந்த, பண்பாட்டைப் பறைசாற்றும், நன்றி விழாவான பொங்கல் விழாவிலும் தங்கள் மூடக் கருத்துக்களை, சடங்குகளை, புராணங்களைப் புகுத்தினர்.



பொங்கல் என்பது அறுவடைத் திருவிழா. விளைவித்த விளைபொருள் களம் கண்ட மகிழ்வில், அந்த விளைவிற்குக் காரணமானவற்றை மதிக்கும் முகத்தான், முதலில் மழைக்கு நன்றி கூறினர். அது மழைத்திருநாள் ஆகும்.
மழை அன்றைய தினம் பொழியாது என்பதால், மழையின் அடையாளமாக ஒரு சொம்பில் தண்ணீர் வைத்து அதற்கு மரியாதைச் செலுத்தினர்.


ஆனால், ஆரிய பார்ப்பனர்கள் இந்த அர்த்தமுள்ள விழாவில் தங்கள் பண்பாட்டை நுழைத்தனர். மழைக்கு அதிபதி இந்திரன். இந்திரனுக்கு போகி என்று ஒரு பெயர் உண்டு. எனவே, மழைக்குக் காரணமான இந்திரனைக் குறிக்கும் போகி என்ற பெயரை மழைத் திருநாளுக்கு மாற்றாக நுழைத்து, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.


மழைக்கதிபதியாக இந்திரன் இருக்க, கரிய மாலை (திருமாலை), மழையின் பலன் பெற்றதற்காக வழிபட மக்களுக்குக் கட்டளையிட்டதால், வருணன் கோபம் கொண்டு பெரும் மழையை பெய்யச் செய்ய, இதனால் உயிரினங்கள் மழையால் பாதிக்கப்பட, கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய் பிடித்துக் காக்க, இந்திரன் தன் தோல்வியை ஒப்பி வெட்கிக் குனிந்து நிற்க, இந்திரனை மன்னித்து அவனுக்கும் சிறப்பு செய்ய, சங்கராந்திக்கு முதல் நாள் இந்திரன் என்ற போகிக்கு போகிப் பண்டிகை கொண்டாட கிருஷ்ணன் கட்டளையிட்டான். இதுவே போகி என்று புராணக் கதையைக் கூறி, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.



போகி என்பதை காலப்போக்கில் போக்குதல் என்று பொருள் கொண்டு, வீட்டிலுள்ள பழைய பொருட்களைக் போக்குதல் என்று முடிவு செய்து, பழைய நூல்கள் உட்பட எல்லாவற்றையும் தெருவிலிட்டு தீ வைத்தனர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொளுத்தப்படுவதால் காற்று மண்டலமே கரும்புகை மண்டலமாக மாறி, மூச்சுக் கோளாறுகளையும், மற்றக் கேடுகளையும் உருவாக்கி வருகிறது.



ஆக, ஆரிய பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பால், அர்த்தமுள்ள மழைப் பண்டிகை, போகிப் பண்டிகையாக மாற்றப்பட்டு, புகைப் பண்டிகையாகி கேடு பயக்கிறது.



பொங்கல் திருநாள்:
பொங்கல் திருநாள், பெரும் பொங்கல் என்று தமிழர்களால் அழைக்கப்படும். இந்த நாள் தமிழரின் முதன்மையான திருநாளும் ஆகும். காரணம், அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. அன்று பயிர் விளைய அடிப்படைக் காரணியாய் உள்ள சூரியனுக்கு நன்றி செலுத்தினர்.
மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்
வேளாண் உற்பத்திக்கு மழை, சூரியன் இவற்றிற்கு அடுத்தது மாடுகள் கட்டாயம்.
காரணம், ஏர் உழப் பயன்படுவதோடு, வேளாண்மைக்குத் தேவையான உரம் கிடைக்கவும் மாட்டுக் கழிவுகள் பயன்படுகிறது என்பதாலும், மாடுகள் உழவனின் தோழன் என்பதாலும், உழவனின் செல்வம் என்கிற சிறப்பாலும் மாடுகளுக்கு ஒரு திருநாள் கொண்டாடினர் தமிழர். இது பண்பாட்டின் அடிப்படையில் நன்றி செலுத்தும் நோக்கில், உதவியாய் அமைந்தவற்றிற்கு உரிய சிறப்பு செய்யும் உணர்வில் உருவாக்கப்பட்டது.


மாட்டுப் பொங்கல் தமிழரின் நன்றி கூறும் பண்பாட்டின் அடையாளம்.
ஆனால், இதையும் புராணக் கதையைப் புகுத்தி புரட்டு வேலை செய்து மாற்றினர். இந்திரன் கோபத்தால் கடும் மழை பெய்யச் செய்ததால் மாடுகள் மிகவும் சிரமப்பட்டதாகவும், பின்னர் மனம் மாறி இந்திரன் மழையை நிற்கச் செய்ததால், மறுநாள் மாடுகள் கட்டு அவிழ்த்து விடப்பட மகிழ்ச்சியில் துள்ளிப் பாய்ந்து ஓடினவென்றும், அதுவே மாட்டுப் பொங்கல் ஆனது என்றும் மாட்டுப் பொங்கலின் மாண்பிலும் மடமையைப் புகுத்தினர்.


தமிழர் பண்பாட்டில் ஆரியப் பண்பாட்டைப் புகுத்தினர்.

காணும் பொங்கல்:
அடுத்த நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல் என்பது வேளாண் உற்பத்திக்காக உழைக்கின்ற உழைப்பாளர்களுக்கு நன்றி சொல்லவும், அவர்களைச் சிறப்பிக்கவும் தமிழர்களால் உருவாக்கப்பட்டு கொண்டாடப்படுவதாகும்.


அன்று உழைப்பாளிகள் நில உரிமையாளர்களைச் சென்று கண்டு, நெல், காய்கறி, துணி போன்றவற்றைப் பெறுவர். நிலத்தின் உரிமையாளர்களும் உழைத்து உற்பத்திப் பெருக்கும் உழைப்பாளிகளை மகிழ்விக்க புத்தாடை, புதுப்பானை, புத்தரிசி, கரும்பு என்று பலதும் வழங்கிச் சிறப்பிப்பர்.



இப்படி உழைப்பாளிகளைச் சிறப்பிக்கத் தமிழர்கள் உருவாக்கிய உழைப்பாளிப் பொங்கல் என்னும் காணும் பொங்கலையும் புராணக் கதைப்புக் கூறி புரட்டினர்;


தங்கள் பண்பாட்டைப் புகுத்தினர்.
கோபங் கொண்டு இந்திரன் பொழியச் செய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மழை நின்ற பின் ஒருவரையொருவர் கண்டு பாதிப்பு பற்றி விசாரித்தனர். அதவே காணும் பொங்கல் என்று கதை கட்டி, காரணம் கூறினர். காணும் பொங்கலிலும் ஆரியப் பண்பாட்டை, புராண மடமையைப் புகுத்தினர்.



இந்த உண்மைகளை மறைத்து ஆரிய பார்ப்பனர்கள் தொடர்ந்து சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்கின்றனர்.


 சித்திரையில் சூரியன் தலைக்கு நேர் இருக்கும். ஆண்டு தொடங்கும்போது தலைக்கு நேர் இருந்து தொடங்க மாட்டார்கள். நாள் தொடங்கும்போது காலையில் சூரியன் கிழக்கில் உதிப்பதைத்தான் எடுத்துக் கொண்டனர். மாறாக, மதியம் தலைக்கு நேர் சூரியன் இருப்பதை எடுக்கவில்லை. அதேபோல் சூரியன் தென்கோடியிலிருந்து தை மாதம் முதல் நாள் வடக்குநோக்குவதைத்தான் ஆண்டின் தொடக்க மாகக் கொண்டனரே தவிர, சூரியன் தலைக்கு நேர் இருக்கும் சித்திரையை அல்ல.



தமிழர் பண்பாட்டை மாற்றி, மறைத்து, ஆரியப் பண்பாட்டைப் புகுத்துவதில் ஆரிய பார்ப்பனர்கள் எவ்வளவு முனைப்புடன் செயல்படுகிறார்கள்.

தமிழர்கள் இவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்!

நன்றி
- மஞ்சை வசந்தன்

கலைஞர்  எழுதிய இலக்கியப் படைப்புகள்.

கலைஞர்  எழுதிய இலக்கியப் படைப்புகள்..!
கலைஞர்  எண்ணற்ற நாவல்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.
அவற்றின் பட்டியல் இங்கே :

தொல்காப்பியப் பூங்கா
ரோமாபுரி பாண்டியன்
சங்கத்தமிழ்
குறளோவியம்
பாயும்புலி பன்டாரக வன்னியன்
புதையல்
பொன்னர் சங்கர்
ஒரே ரத்தம்
தென்பாண்டிச் சிங்கம்
சுருளிமலை
மகான் பெற்ற மகன்
கவிதையல்ல
ஒரு மரம் பூத்தது
வெள்ளிக்கிழமை
கயிற்றில் தொங்கிய கணபதி
கிழவன் கனவு
சீறாப்புராணம்
சிலப்பதிகாரம்
கலைஞரின் கவிதைகள்
அண்ணா கவியரங்கம்
இனியவை இருபது
அரும்பு
சாரப்பள்ளம் சாமுண்டி
பெரிய இடத்துப் பெண்
நடுத்தெரு நாராயணி
கலைஞரின் சிறுகதைகள்
மணி மகுடம்
உதயசூரியன்
தூக்குமேடை
புனித ராஜ்யம்
பரதாயனம்
வண்டிக்காரன் மகன்
மதுப்பழக்கம் ஒரு சமூகப் பிரச்சினை
மேலவைப் பேருரை
எழுச்சிக் கோலம் காண்போம்
நாளும் தொடரும் நமது பணிகள்
உரிமையின் குரலும், உண்மையின் ஒளியும்
நமது நிலை
இலட்சிய பயணம்
அக்கினிப் பிரதேசம்
சரித்திரத் திருப்பம் புதிய சகாப்தம்
அண்ணா அறிவாலயத்துக்குத் தடையா?

உள்ளாட்சி மன்ற ஊழல்கள்
இருபது அம்சம்
இருளும் ஒளியும்
சொன்னதைச் செய்வோம்
உண்மைகளின் வெளிச்சத்தில்
உறவுக்குக் கை கொடுப்போம்
உதய ஒளி
உதயக் கதிர்
ஒதுக்கிய நிதியை ஒதுக்கியவர் யாரோ?
இந்தித் திணிப்பு
உறவும், உரிமையும்
இது ஓர் இனமானப் போர்
கல்லணையிலிருந்து கழனிக்கு
வரலாற்றுச் சுவடு
மேடையிலே வீசிய மெல்லியப் பூங்காற்று
உண்மையின் உரத்த குரல்
போர் முரசு
ஒளி படைத்த கண்ணினாய் வா.. வா.. வா..
சூளூரை
அமைதிப்படையா? அமளிப்படையா?
அக்கினிக்குஞ்சு
இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது?
இந்தியா? இந்தியாவா?
இலக்கிய விருந்து
கடவுள் மீது பழி
அன்றும் இன்றும்
இருபது சதவிகித ஒதுக்கீடு
இது ஒரு தொடக்கம்
எச்சரிக்கை தேவை.. எழுச்சி தேவை!
திசை திருப்பும் படலம்
பேசும் கலை வளர்ப்போம்
யாரா? யாரால்? யாரால்?
கண்ணீரே கவசம்
இலங்கைத் தமிழா இது கேளாய்!
இந்தியாவில் ஒரு தீவு
சிறையில் பூத்த சின்னச் சின்ன மலர்கள்
ஆறு மாதக் கடுங்காவல்
கழகத்துப் பரணி
கடிதங்கள், கடிதங்கள், கண்ணீர் கடிதங்கள்
நெஞ்சுக்கு நீதி பாகம்-1
நெஞ்சுக்கு நீதி பாகம்-2
கொழும்பு ஒப்பந்தம்
கலைஞரின் கடிதங்கள் பாகம்-1
கலைஞரின் கடிதங்கள் பாகம்-2
கலைஞரின் கடிதங்கள் பாகம்-3
கலைஞரின் கடிதங்கள் பாகம்-4
கலைஞரின் கடிதங்கள் பாகம்-5
கலைஞரின் கடிதங்கள் பாகம்-6
கலைஞரின் கடிதங்கள் பாகம்-7
கலைஞரின் கடிதங்கள் பாகம்-8
கலைஞரின் கடிதங்கள் பாகம்-9
கலைஞரின் கடிதங்கள் பாகம்-10
கலைஞரின் கடிதங்கள் பாகம்-11
கலைஞரின் கடிதங்கள் பாகம்-12





Tuesday, 1 January 2019

கலைஞரால் திருவாரூர் பெற்ற எண்ணற்ற வசதிகள்

கலைஞரால் திருவாரூர் பெற்ற எண்ணற்ற வசதிகளை இந்த பதிவில் விபரத்துள்ளேன்

திருவாரூர் தொகுதிக்கு ஓட்டுக் கேட்க வரும் ஆளும் அதிமுகவிடம்
தஞ்சாவூர் -நாகை சாலை ஏன் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது?
சாலைப் பணியை முடித்து விட்டு வந்து ஓட்டுக் கேளுங்கள் என மக்கள் சொல்ல வேண்டும்

பிரசித்திப் பெற்ற திருவாரூர் தேரை புதுப்பித்து ஓட வைத்தவர் கலைஞரே

(1) அரசு கலைக்கல்லூரி உருவாக்கி தந்தார்.
(2) பஸ்நிலையம் கட்டித்தந்தார்.
(3) ஓடம்போக்கி ஆற்றில் பாலம் கட்டிதந்தார்.
(4) 1989ல் ஆட்சிக்கு வந்தபோது 13 ஆண்டு கிடப்பில் போடப்பட்ட பைபாஸ் சாலை பணியை முழுமையாக்கி தந்தார்.
(5) 4வது முறையாக முதல்வரானபோது தனிமாவட்டமாக ஏற்படுத்தி தந்தவர்.
(6) மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட தலைமை காவல் கண்காணிப்பு கட்டிடம் கட்டி தந்தார்.
(7) தமிழகத்தில் முதன்முறையாக திருவாரூர் மாவட்டத்தை கணினி மாவட்டமாக்கி தந்த பெருமைக்குரியவர்.
(8) கமலாலய குளத்தை தூர்வாரி சீரமைத்து தந்தார்.
(9) நீண்ட கால கோரிக்கையான ரயில் பாதை அகலபாதை திட்டத்தை கலைஞரின் முயற்சியால் மத்திய அரசிடம் பெற்று நிறைவேற்றி தந்தவர்.
(10) மேலும் அரசு மருத்துவ கல்லூரியை பெற்றுத்தந்தார்.
(11) முக்கிய சிகரமாக மத்திய பல்கலைக்கழகத்தை திருவாரூருக்கு பெற்று தந்தார்.
எப்போதெல்லாம் அதிமுக அரசு வருகிறதோ, முதல்வராக ஜெயலலிதா வரும்போதெல்லாம் புறக்கணிப்பட்ட மாவட்டமாக திருவாரூர் உள்ளது.
கலைஞர் ஆட்சி காலத்தில் திருவாரூருக்கு புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்து இடமும் தேர்வு செய்யப்பட்டது.
ஆட்சி மாறியபின்னர் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வேளாண் கல்லூரி கொண்டுவர முயற்சிஎடுத்தவர் கலைஞர். அது ஜெயலலிதா ஆட்சியில் முடக்கப்பட்டது.
திருவாரூரை ஒரு கல்வி மையமாக
மாற்றிய பெருமை கலைஞர்  அவர்களையே சேரும்
1)திருக்குவளையில் அரசுப் பள்ளியை நிறுவ அரசுக்கு பங்குத் தொகை செலுத்தி, அஞ்சுகம் முத்துவேலர் நினைவு தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார்.
2) தனது மணிமகுடம் நாடகத்தின் வாயிலாகத் திரட்டிய நிதியைப் பங்குத் தொகையாக அரசுக்குச் செலுத்தி, காட்டூரிலும் ஒரு அரசுப் பள்ளியைத் தொடங்க ஏற்பாடு செய்தார்.
அதே ஊரில் மேல்நிலைப் பள்ளி யைத் தொடங்கவும் நடவடிக்கை எடுத்தார்.
3)தான் படித்த வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் தனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் வகுப்பறைக் கட்டிடங்களைக் கட்டிக்கொடுத்தார்.
4)2008-ல், தமிழகத்தில் 16 இடங் களில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கிளைகள் நிறுவப்பட்டன. திருக் குவளையிலும் ஒரு கிளையைத் தொடங்க வேண்டும் என்று கலைஞர் விரும்பினார். போதுமான இட வசதி அரசிடம் இல்லாத நிலையில், தருமபுர மடத்துக்குச் சொந்தமான நிலத்தை அறநிலையத் துறை மூலம் அரசுக்கு விலைக்கு வாங்க தனியாக அரசாணையை வெளி யிட்டார்.
5)அப்படித் தொடங்கியதுதான் அண்ணா பல்கலைக்கழகத் திருக் குவளை கிளை.
6) அந்தத் தொகையைத் திருக்குவளை கோயிலுக்கும் பெற்றுத் தந்தார் என்று நினைவுகூர்கிறார் திருக்குவளையைச் சேர்ந்த கோசி. குமார்.
7) இன்றைக்கு, திருக்குவளை கிளை மூலம் ஆண்டுக்கு 420 மாணவர்கள் பொறியியல் பட்டம் பெறுகிறார்கள்.
8) திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர் பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களே இங்கு அதிகம் பயின்று வருகின்றனர்.
9) திருக்குவளையில் அதிகளவு பொறியியல் பட்டதாரிகள் உருவாகி யிருப்பதன் விளைவாக அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று, ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இது ஒன்றே இப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குச் சான்று என்கிறார் திருக்குவளை பொறியியல் கல்லூரி யின் டீன் துரைராஜன்.
10) திருவாரூரில் 2010-ல் அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கிய கலைஞர், அடித்தட்டு மக்களுக்கு மருத்துவ சிகிச்சை சென்றடையவும், தமிழகத்தில் மருத்துவப் படிப்பு களுக்கான எண்ணிக்கை அதிகரிக்க வும் காரணமாக விளங்கினார். இந்த மருத்துவக் கல்லூரி மூலம் ஆண்டுக்கு 100 பேர் மருத்துவப் படிப்பு பயின்று வருகிறார்கள்.
11) 2009-ல் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு தொடங்கப்பட்ட ஏழு மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று திருவாரூர் அருகே நீலக் குடியில் இயங்கிவரும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் இயங்கிவரும் இப்பல்கலைக்கழகத்தில் 22 துறை கள் உள்ளன. ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப் படிப்புகள், ஒருங்கிணைந்த 4 ஆண்டு கல்வியியல் பட்டப் படிப்புகள். 22 துறைகளில் எம்.ஃபில், பிஹெச்டி படிப்புகள், பல்வேறு பல்கலைக் கழகங்களுடனான புரிந்துணர்வின் அடிப்படையில் பட்டயப் படிப்புகள் என்று மாணவர்களின் கல்விக் கனவுகளைச் சாத்தியமாக்கும் பல்கலைக்கழகம் இது.
மத்தியப் பல்கலைக்கழகத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை யின் அப்போதைய அமைச்சர் கபில் சிபலிடம், மத்தியப் பல்கலைக் கழகத்தில் 50 ரூ இடஒதுக்கீட்டைத் தமிழகத்துக்கு, குறிப்பாக இந்தப் பகுதி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் கலைஞர்.
அந்தக் கோரிக்கை இதுவரை நிறைவேற வில்லை. அது நிறைவேறும் போது கலைஞர் அவர்களின் இன்னொரு கல்விக் கனவும் பூர்த்தியாகும்

2007-08-ம் கல்வி ஆண்டு முதல், பட்டப்படிப்பு மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தை ரத்து செய்தது கலைஞர் அரசு
2010-11ல் அரசுக் கல்லூரிகளில் பயிலும் பட்ட மேற்படிப்புக்கான கட்டணத்தை ரத்து செய்ததும் கலைஞர் அரசே
பட்டதாரி அல்லாத குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பில் சேர்வதற்குக் கட்டணத்தை ரத்துசெய்ததும் கலைஞர் அரசே
மேலும் 7000 கோடி விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட்டதால் பலன் பெற்றதும் திருவாரூர் மாவட்டமே
இதைவிட கலைஞர் திருவாரூருக்கு வேறு என்ன செய்ய வேண்டும்?

(பல்வேறு பத்திரிகை தகவல்களின் தொகுப்பு)

Saturday, 29 December 2018

கலைஞர் வெறுப்பு" - என்பதை நாம் ஏன் விவாதிக்க வேண்டும்?

"கலைஞர் வெறுப்பு" - என்பதை நாம் ஏன் விவாதிக்க வேண்டும்?

(WhatsApp ல் வெளிவந்த பதிவு)


"இந்தியாவின் எதிரிநாடு எது?" - என்று கேளுங்கள்… எல்லோரும் பாகிஸ்தான் என்று சொல்வார்கள். அப்படி சொல்பவர்களில் 99 விழுக்காட்டினர் தன் வாழ்நாளில் ஒரு பாகிஸ்தானியரைக்கூட சந்தித்திராதவர்கள்.

"இந்தியாவை ஒழித்துக்கட்டும் நோக்கோடு அணி அணியாய் வருவதாக சொல்லப்படும் தீவிரவாதிகளை பாகிஸ்தான்தான் உற்பத்தி செய்கிறது" - என நாம் தீர்மானமாக நம்புகிறோம்.


அதற்கான ஆதாரங்களை நாம் எப்போதும் கோருவதில்லை, அந்த முடிவை எடுக்க நம்மை தூண்டுவது "செய்தியின் நம்பகத்தன்மையல்ல, பாகிஸ்தான் நம் எதிரி" - எனும் தீர்மானமான வெறுப்புணர்வு.


அது ஒன்றும் நம் பிறவியிலேயே உருவாகிவிடவில்லை, அவை நம் பொதுக்கருத்தின் விளைவாக உருவாகின்றது அந்த பொதுக்கருத்தை ஊடகங்கள் உருவாக்குகின்றன.

*கலைஞர் ஒழிக: சம்பவம் 2*

நாம் காணும் பெரும்பான்மை விளம்பரங்கள் அதன் தரம் குறித்தோ விலை குறித்தோ பேசுவதில்லை. ஒரு பொருளை விற்க இவையிரண்டும்தான் தேவை.

ஆனால் விளம்பரங்கள் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான உணர்வை உருவாக்குகின்றன (பற்கள் பாதுகாப்பாய் இருக்கும் என குளோசப் விளம்பரம் சொல்லி நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?).


அந்த உணர்வு அப்பொருள் மீதான விருப்பத்தையும் அதன் வழியே அதற்கான தேவையையும் உங்களிடம் உருவாக்குகிறது.
நேரெதிராக பேரங்காடிகளில் உள்ள தள்ளுபடி வாசகங்கள் ஒரு லேசான பதற்றத்தை உங்களிடம் உருவாக்குகிறது (never before, never again, lowest price challenge, final price on this product இன்னும் பல).



இந்த பதட்டம் உங்கள் முடிவெடுக்கும் திறனை பாதிக்கிறது. அதனால் தேவை குறித்த பரிசீலனையில்லாமல் நீங்கள் பொருளை வாங்க முனைகிறீர்கள்.


உங்கள் விருப்பத்துக்கும் வெறுப்புக்கும் உங்களிடம் நூறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவை முற்றாக உங்களிடமிருந்தே உருவானது என சொல்ல முடியாது. அதனை பிறரும் சேர்ந்தே கட்டமைக்கிறார்கள் என்பதை விளக்கவே மேலேயுள்ள உதாரணங்கள் தரப்பட்டிருக்கின்றன.

 இன்றைய சூழலில் இதனை நேர்த்தியாகவும் பரந்த அளவிலும் செய்ய இயலும்.
சுயமாக பேசவே அஞ்சி நடுங்கும் நரேந்திரமோடி எனும் லாயக்கற்ற மனிதன் மீதான கவர்ச்சி திட்டமிட்டே உருவாக்கப்பட்டது.

 அவ்வாறே கருணாநிதியின் மீதான வெறுப்பும் பரவலான உணர்வாக மாற்றப்பட்டிருக்கிறது.
உடனே என்னை திட்ட ஆரம்பிக்கவேண்டாம், இன்னும் சில பத்திகளில் உள்ள இதன் காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றிய கருத்துக்களுக்குப் பிறகு வசவுகளை வைத்துக்கொள்வது சரியாக இருக்கும்.
நாம் செய்திகளுக்காக ஊடகங்களை நம்புகிறோம், காரணம் நம்மால் எல்லா செய்திகளையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க இயலாது. ஆகப்பெரும்பாலான மக்கள் ஊடகங்களின் கண்ணோட்டத்துடனேயே செய்திகளை உள்வாங்குகிறார்கள்.



*கடன் தொல்லையால் செத்தானா? கள்ளக்காதலால் செத்தானா? - என உங்களை தீர்மானிக்க வைப்பது செத்தவனல்ல, தினத்தந்திதான்.*



ஊடகங்கள் செய்தியை தங்கள் கண்ணோட்டம் மற்றும் நோக்கம் சார்ந்தே தருகின்றன. அந்த நோக்கம் முதலாளிகளாலும் ஆசிரியர்களாலும் தீர்மானிக்கப்படுகிறது.. இந்த வாய்ப்பின் மூலமே ஊடகங்கள் நம் கருத்துக்களை உருவாக்குகின்றன.


இங்கே யார் வெறுக்கப்பட வேண்டியவர் என்பதை ஊடகங்கள் தீர்மானிக்கின்றன.
_ஒரு கொலை நடந்தால் ஊடகம் யாரை கொலைகாரன் என்று என்று சொல்கிறதோ அவரையே கொலையாளி என நம்மில் பெரும்பான்மையானவர்கள் கேள்விக்கிடமின்றி ஏற்றுக்கொள்வார்கள்_


*தீவிரவாதி ஆயிஷா எனும் பச்சைப்பொய்ச் செய்தியை ஆண்டுக்கணக்கில் நம்பியது தமிழகம், அது அம்பலமான பிறகு மன்னிப்பு கேட்கும் குறைந்தபட்ச அறம்கூட தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு இருக்கவில்லை*


பெரும்பாலான இந்திய ஊடகங்களின் பிடி பார்ப்பனர்களிடம் இருக்கிறது.

 அவர்கள் தன்னியல்பாக ஜெயலலிதாவையும் பாஜகவையும் ஆதரிப்பவர்கள்.
அதனால்தான் சொந்த கட்சி அலுவலகத்துக்கு ஆண்டுக்கு இருமுறை வரும் ஜெயலலிதாவை சிறந்த நிர்வாகி என பல்லண்டுகாலமாக மக்களை நம்ப வைத்தார்கள்.


ஜெயலலிதாவின் நிஜ அடையாளம் பயம்.. பயம் மட்டுமே, அதனால்தான் கூடுமானவரை அவர் மக்கள் பார்வையில் படுவதை தவிர்க்கிறார். உலகின் ஆகப்பெரும்பாலான சர்வாதிகாரிகளின் நிஜ இயல்பு அதீத பயம்தான். அதனை மறைக்க அவர்கள் பயன்படுத்திய உத்தியே சர்வாதிகாரம்.


ஹிட்லருக்கு தன் உடலில் ஏதேனும் நோய் இருக்குமோ எனும் அச்சம் ஆட்டிப்படைத்தது, இலங்கையின் சமீபகால சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ச புலிகள் ஒழிக்கப்படும்வரை சுதந்திரதின கொடியையே தன் வீட்டு வளாகத்தில்தான் ஏற்றினார்.


ஜெயாவின் பயத்தை மறைத்து அவரை இந்த ஊடகங்கள்தான் தைரியலட்சுமியாக சித்தரித்தன. ஆட்சியில் இருக்கையில் ஜெயலலிதாவை நல்லவராக காட்டுவது என்பது கருவாட்டை மீனாக மாற்றுவதைக் காட்டிலும் சிரமம்.


அதனால்தான் அவருக்கு எதிரணியில் உள்ள கருணாநிதியை மிக மோசமானவராக காட்டி ஜெயாவின் கேட்டை சிறியதாக்க முற்படுகிறார்கள். மேலும் ஒரு காலத்தில் பார்ப்பன ஆதிக்கம் ஒழிக்கப்பட காரணமான பெரியாரின் குழுவில் இருந்தவர் எனும் பரம்பரைப் பகை இவர்களுக்கு இப்போதும் தொடர்கிறது (பாஜகவோடு கூட்டு சேர்ந்த பிறகும், ராமானுஜர் கதை எழுதியபிறகும்)



*ராஜாஜிக்குப் பிறகு நமக்கு வாய்த்த சொத்து ஜெயலலிதா – என்று வெளிப்படையாகவே சோ தனது சாதி திமிரை காட்டினார்.*



சாமானிய பார்ப்பனர்களில் பெரும்பாலானவர்கள் பாஜகவையும், அதிமுகவையும் ஆதரிப்பவர்கள்.



"உங்கள் நடத்தையானது நம்பிக்கையில் இருந்து பிறக்கிறது" - என்பது ஒரு உளவியல் விதி.
அம்பானி பத்தாயிரம் கோடிக்கு வீடு கட்டிய செய்தியை பார்க்கிறீர்கள். அதே சமயத்தில் உங்கள் ஏரியா குப்பை வண்டிக்காரர் ஸ்மார்ட் போன் வைத்திருப்பதை பார்க்கிறீர்கள்.
மனசாட்சியோடு சொல்லுங்கள் நீங்கள் இதில் எதை அதிகம் விமர்சிப்பீர்கள்? பொறாமை என்பது நமக்கு இணையானவன் அல்லது கீழிருப்பவன் மீதுதான் வரும்.



தமிழகத்தில் பெரும்பான்மையானவர்கள் கருணாநிதியின் சாதியைவிட உயர்ந்த சாதி என என கருதப்படும் சாதியினர் அல்லது இணையான சாதியினர். தனக்கு கீழானவருக்கு பெரிய அதிகாரமும் திரண்ட சொத்தும் கிடைப்பது இவர்களின் பெரும்பான்மையானவர்களுக்கு ஏற்கவியலாததாக இருக்கிறது.
இந்தியாவின் சாதி அடுக்க்கின் மீதான நம்பிக்கை பலரது மூளையிலும் குடிகொண்டிருக்கிறது. அதுதான் ஜெயா சொத்துக்குவிப்பின் மீது அலட்சியத்தையும் கருணாநிதியின் சொத்துகள் மீதான ஆத்திரத்தையும் உருவாக்குகிறது.




பெருமளவு ஊடகங்கள் ஜெயாவுக்கு ஆதரவான நிலையை தக்கவைக்க கருணாநிதி எதிர்ப்பை தொடர்கின்றன.


 பெரும்பான்மை மக்களிடம் உள்ள சாதியுணர்வு அதற்கு துணைபோகிறது. இவை ஒரு வலுவான பொதுக்கருத்துக்கு போதுமானவை.
கிடா மீசை வீரத்தின் அடையாளம் என மக்களால் நம்பப்படுகிறது. ஆனால் பெரும்பாலான கிடாமீசைக்காரர்கள் அடிமைகளின் கூடாரமான அதிமுகவில் இருக்கிறார்கள். ஆக அவர்களின் வீரம் என்பது தன்னிலும் கீழான மக்களை அதட்டுவது மட்டும்தான்.



பெரும்பான்மை நடுத்தரவர்கள் கியூவில் காத்திருக்க வேண்டியிருக்கிறது எனும் சலிப்பில் அரசுத்துறையை வெறுப்பதாக சொல்வார்கள். ஆனால் அவர்கள்தான் பெசண்ட் நகர் முருகன் இட்லிக் கடையிலும் அமெரிக்க தூதரகத்திலும் வரிசையில் நிற்கிறார்கள்.
அவர்கள் கியூவை வெறுக்க காரணம் என்னிலும் கீழானவர்களோடு வரிசையில் நிற்பதா எனும் சலிப்புதான்.

 மேலும் அமெரிக்க தூதரகத்திலும் டீஏவி பள்ளிவாயிலிலும் வரிசையில் நிற்பது கவுரவத்தை உயர்த்தும் செயல் என நீங்கள் நம்பவைக்கப் பட்டிருக்கிறீர்கள்.
ஆகவே ஓரிடத்தில் கியூவை வெறுக்கும் மக்கள் மற்றோர் இடத்தில் அதனை விரும்புகிறார்கள். இந்த முரண்பாடான விருப்பம் மற்றும் வெறுப்பைத்தான் நாம் அரசியலிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.



*"கருணாநிதி வெறுப்பு" - என்பதை நாம் ஏன் விவாதிக்க வேண்டும்?*


காரணம் இது கருணாநிதிக்கு எந்த நட்டத்தையும் உண்டாக்கப் போவதில்லை. ஆனால் கருணாநிதி வெறுப்பால் நாம் இழப்பது நிறைய.


ஜெயா மீதான பல தளங்களில் நிலவும் அச்சம், உப்பரிகையில் நின்று மட்டும் மக்களை பார்க்கும் அவரது மகாராஜாத்தனமான அரசியல், மக்களை சந்திப்பதில் காட்டும் அலட்சியம், பதில் சொல்லக்கூட விரும்பாத பொறுப்பின்மை என எல்லாவற்றையும் நாம் இயல்பாக எடுத்துக்கொள்ள காரணம் கருணாநிதி வெறுப்பு.


டெக்னிக்கலாக சொன்னால் வெறுப்பு மற்றும் கடுங்கோபத்தில் இருக்கையில் நம் கவனம் வெறுப்பவர் மீது மட்டும் இருக்கும் மற்ற பிரச்சனைகளின் தீவிரத்தை நாம் கணக்கிடத் தவறுவோம். ஒரு குடிமகனாக நம்மை தினம் தினம் சிக்கலுக்கு உள்ளாக்கும் பிரச்சினைகளின் ஆரம்பப்புள்ளி இவைதான்.



குமுதம் முதல் கோர்ட்வரை அவருக்கு விசுவாசமாக இருக்க அவரது சாதி காரணமாக இருக்கிறது என்றால் ஒரு சகிக்க முடியாத அரசை நடத்துகையிலும் அவர் குழாமுக்கு உள்ள இறுமாப்பிற்கு காரணமாக இருப்பது நமது கருணாநிதி வெறுப்பு.


*கார்பரேட்டுக்களுக்கு எதிரான (தேர்தல்) அரசியல் கட்சியென்று ஒன்று இந்தியாவில் இல்லை. ஆனால் கார்ப்பரேட்டுக்கள் ஏன் பாஜகவை அதிகம் ஆதரிக்கிறார்கள்?*


காரணம் அங்கு அதிகாரம் ஓரிடத்தில் குவிந்திருக்கிறது. கட்சிக்குள் இருக்கும் எதிர்க்குரல் குறைவாக இருக்கிறது, முட்டாள்களின் எண்ணிக்கை மிகஅதிகமாக இருக்கிறது, இந்தியாவை நிரந்தரமாக ஆள்வது கார்ப்பரேட்டுக்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டணிதான். இதில் கட்சிகள் பாத்திரம் வெறும் அடியாள் மட்டுமே.


அதிகாரிகளுக்கும் கம்பெனிகளுக்கும் குறைந்தபட்ச ஜனநாயகம்கூட இல்லாத கட்சிகள் மட்டுமே விருப்பத்தெரிவாக இருக்கின்றன. மக்களால் சந்திக்க முடியாத எதற்கும் பதிலளிக்க விரும்பாத தலைமையும் அதற்கு மண்டியிட்டு சேவகம் செய்யும் நிர்வாகிகளும் அவர்களது சுரண்டலை இலகுவாக்குகின்றன.


திமுக பாஜக கூட்டணி எனும் அனுமானத்தை சுப்ரமணிய சாமி வெளியிட்ட உடனே சமூக ஊடகங்களில் உள்ள திமுகவினர் எதிர்குரல் எழுப்புகிறார்கள்.

 பாஜகவோடு திமுக கூட்டணி வைத்தால் நான் முதல் முறையாக அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டியிருக்கும் என்றுகூட ஒரு திமுககாரர் எழுதியிருந்தார்.


விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் திமுக தலைமைக்கு இத்தகைய எதிர்குரல்களுக்கு பதிலளிக்கவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் சந்திக்க முடிகிற நபராக கருணாநிதி இருந்தார்.


இந்த இயல்பு அதிகாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் அசௌகர்யமானதாக இருக்கிறது. அவர்களுக்கு ஒரேவீச்சில் முடிக்கிற ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.


ஒரு அறிவிப்பில் லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிற, ஒரே நாளில் 100% பஸ் கட்டணத்தை உயர்த்துகிற ஜெயாவின் இயல்புக்கு அடிப்படை மக்கள் மீதான அலட்சியம். அதுதான் உண்மையான ஆட்சியாளர்களுக்கு தேவையாய் இருக்கிறது.



பத்திரிக்கை படிக்கிற, மக்களை சந்திக்கிற வழக்கம் உள்ள கருணாநிதி மீது வெறுப்பும் பத்திரிக்கைகள் வாயிலாக பதில் சொல்லக்கூட விருப்பமில்லாத ஜெயா மீதான அச்சமும் பொதுக்கருத்தாவதால் அடுத்தகட்ட தலைவர்கள் ஜெயா பாணி தலைவராகவே முனைவார்கள்.
இப்போதுள்ள தலைவர்கள் பலருக்கும் அதுதான் உள்மன ஆசையாக இருக்கும். தமிழக அரசியல் களத்தின் தலைமைகள் முழுக்க வெறும் ஜெயலலிதாக்களாகவே இருந்தால் எப்படியிருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்..



எல்லாவற்றுக்கும் மேலாக அச்சமூட்டக்கூடிய காரணி, பாஜகவுக்கு காத்திருக்கும் அதிமுக எனும் துணை அமைப்பு. பாஜக எல்லா மாநிலங்களிலும் தங்கள் துணையாய் இருந்த அமைப்புக்களின் வாக்கு வங்கியை தின்று வளர்ந்த கட்சி.
மஹாராஷ்டிராவில் சிவசேனாவோடு கூட்டணி அமைத்தார்கள், இப்போது அதனை பின்னுக்கு தள்ளி அங்கே பாஜக முதலிடத்துக்கு வந்திருக்கிறது.


பீஹாரில் நிதிஷ், பஸ்வான் கட்சிகளோடு கூட்டணி அமைத்தார்கள், இப்போது பஸ்வான் ஒரு செல்லாக்காசு. ஆனால் பாஜக இரண்டாவது பெரிய சக்தியாக மாறியிருக்கிறது.


விரிவாக ஆராய்ந்தால் ஹரியானா, கர்நாடகா, காஷ்மீர் என பல உதாரணங்களை சொல்ல முடியும். அவர்கள் செல்வாக்கு பெறும் இடங்கள் எல்லாம் வழக்கத்தைக் காட்டிலும் தீவிரமாக நாசமாகிக் கொண்டிருக்கின்றன. மோடி பெரும்பான்மை பெற்றதால் விலையுயர்வும் அடிப்படைவாதமும் புற்றுநோய் போல வளர்கிறது.



ஜெயாவின் அரசியல் செயல்பாடுகள் போயஸ்கார்டனுக்கு வெளியே ஒரு மணிநேரத்துக்கு மேல் நீடிக்க முடியாத சூழலில், சசிகலா கும்பலை வழிக்கு கொண்டுவந்து அதிமுகவை கைப்பற்ற பாஜகவுக்கு வெகுகாலம் ஆகாது.



சாதிச்சங்கங்களை கைப்பற்றி தங்கள் அடிப்படைவாதத்தை கிராமங்களுக்கு கொண்டு செல்ல ஆரம்பித்திருக்கிறது அக்கட்சி.
ஊடகங்கள் கிட்டத்தட்ட முற்றான பாஜக சார்பு நிலையில் இருக்கின்றன. புதிய தலைமுறை – பாஜக கூட்டணிக் கட்சியுடையது, தினமலர், தினமணி , தந்திடிவி ஆகியவை ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளால் இயக்கப்படுகிறது.


 திமுக பத்திரிக்கையாக அறியப்படும் தினகரனே கடந்த நாடாளுமன்ற தேர்தலன்று மோடியின் மண்டையைத்தாங்கிய விளம்பரத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டது.


அதற்கு இன்னொரு ஜாக்பாட் ஆக இருக்கப்போவது அதிமுக கட்சிதான். இத்தனை அபாயகரமான சூழலில் வெகுமக்களின் கவனம் கருணாநிதியின் மீதான வெறுப்பில் நிலைகொள்வது நல்லதல்ல.



விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகவிருக்கும் நிலையில் இன்னும் 70சதவிகிதம் மக்கள் வறுமையில் இருக்கிறார்கள்.
இதனை இந்திய அரசியல் அமைப்பின் தோல்வி என சொல்ல இயலாத நாம் எப்படி நாற்பதாண்டுகால திராவிட அரசியலால்தான் வீணாய் போனோம் என சொல்கிறோம்? காரணம் நாம் அப்படி சொல்லும்படி பயிற்றுவிக்கப்பட்டு விட்டோம்.
இவ்வாறே தனியார்மயம் சிறந்தது எனவும், ஜெயலலிதா சிறந்த நிர்வாகி எனவும் பல அடிப்படையற்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுமாறு பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம்.


இவற்றை பயிற்றுவித்தவர்கள்தான் கருணாநிதி வெறுப்பையும் பயிற்றுவிக்கிறார்கள். பார்ப்பனர்கள் திமுகவை வெறுப்பதில் ஒரு காரணம் இருக்கிறது. அவர்களது பழைய பகை, தங்களது எதிர்கால நலனுக்கான பாஜகவின் வளர்ச்சி என பல்வேறு தேவைகளோடு அவர்கள் வெறுக்கிறார்கள்.
ஜெயாவின் எதேச்சதிகாரத்தால் அவர்களுக்கும் இழப்புக்கள் ஏற்படுகிறது, ஆனால் ஜெயா அவர்களது சாதி ஆதிக்கத்தின் முகம். அதற்காக அவர்கள் எதையும் சகித்துக்கொள்வார்கள்.



ஆனால் தமிழகத்தின் வெகுமக்களது நிலை அவ்வாறானதல்ல. பார்ப்பனர்கள் போட்ட பாதையில் பயணிக்காத (பெரியாரும் கம்யூனிசமும் செல்வாக்கு செலுத்திய காலம்) ஆண்டுகளில்தான் ஓரளவுக்கு உருப்படியான திசையில் தமிழகம் பயணித்திருக்கிறது.
தமிழ்வழிக் கல்வி, தமிழில் அர்ச்சனை, சமூகநீதி போன்ற திராவிட இயக்க கொள்கைகளில் திமுக பெயரளவுக்குத்தான் செயல்படுகிறது என்பது தமிழ்தேசிய மற்றும் சில இந்நாள் & பழைய இடதுசாரி இயக்கத்தவர்கள் குற்றச்சாட்டு.


பெயரளவுக்குக்கூட செயல்படுபவர்கள் இருக்ககூடாது என்பது பார்ப்பன லாபியின் அஜெண்டா அதனால்தான் எத்தனை இணக்கமாக செயல்பட்டாலும் திமுகவை ஒழித்துக்கட்ட அவர்கள் முனைகிறார்கள் (சோ – துக்ளக் விழா பேச்சை பார்க்கவும்).
சமூகநீதி தொடர்பான எல்லா கேள்விகளையும் திமுகவை நோக்கி எழுப்புவது அதற்கான முழு உரிமையும் உள்ள கட்சி திமுக எனும் பிம்பத்தை உருவாக்கும் (அதில் கம்யூனிஸ்டுகளுக்கு பெரும் பங்குண்டு. இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தவர்கள் பங்கு அதிகம்). உண்மையில் சமூகநீதி சிந்தனை தமிழகத்தின் சொத்து, திமுக ஒருகாலத்தில் அதனை ஏற்றுக்கொண்ட கட்சி.


யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் நடக்கும் அந்த ஆட்சியும் மோடிக்கு பயந்துதான் நடக்கும்   அரசுப்பள்ளிகள் அழிந்துகொண்டே வரும், தமிழ் மொழிக்கும் அக்கதிதான் ஏற்படும். இவையெல்லாம் மக்களின் போராட்டங்களின் வாயிலாக மட்டுமே களையப்படக்கூடியவை.
மதவாதம், ஊழல், தனியார்மயம், இயற்கைவள சுரண்டல் போன்ற பல்முனைத் தாக்குதலுக்கு தமிழகம் முகம் கொடுக்கிறது. இதில்  மிக எளிதாக இந்துத்துவமும் முதலாளித்துவமும் நம்மை ஒழித்துவிடும்.



*பயிற்றுவிக்கப்பட்ட மிருகங்களைப் போல கைக்காட்டும் இடத்தில் பாய்வது முட்டாள்தனம்.*
*நிறைய வாசிப்போம், அதிகம் விவாதிப்போம் அதுதான் அறிவார்ந்த சமூகத்தின் இலக்கணம்.*



( இந்த பதிவு துருக்கள் blog இல் இருந்து எடுக்கப்பட்ட பதிவு. WhatsApp ல் வெளிவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுதியவருக்கு பாராட்டுகள்)