Saturday 7 July 2018

திராவிடமா? தமிழ்தேசியமா? எது தேவை? ஏன்?

திராவிடமா?  தமிழ்தேசியமா?
எது தேவை? ஏன்?

பெரியார் திராவிடர்களுக்காக குரல் கொடுத்தபோது திராவிடர்கள் நிலை என்ன?

எல்லாவற்றிலும் மூடம்பிக்கைகள், சாதிவெறி,சூத்திரப்பட்டத்துடன் படிப்பறிவின்றி வீழ்ந்து கிடந்தனர் மக்கள்.

திராவிடம் வரும் முன்பே வீழ்ந்து கிடந்த தமிழர்களை எப்படி திராவிடத்தால் வீழ்ந்தார்கள் என்று சொல்கிறீர்கள் தமிழ்தேசியவாதிகளே.?

பெரியார் திராவிடம் பேச வந்தபோது தமிழ்நாடு என்பதே கிடையாதே.  சென்னை இராஜ்யம்தானே இருந்தது. அது நான்கு மொழிகளை உள்ளடக்கிய இராஜ்யம் என்பதால்தான் பொதுவான பெயராக இனத்தின் அடிப்படையில் திராவிடம் என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது.

திராவிடத்தின் முக்கிய நோக்கமே ஆரியர்கள் உருவாக்கிய ஏற்றத்தாழ்வை சிதைப்பதும் சமதர்ம சமநீதியுள்ள சமுதாயத்தை உருவாக்குவதுதானே.

மொழி அடிப்படையில்  அதாவது தமிழ் தேசிய அடிப்படையில் தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்றால் அதில் ஆரியர்களையும் சேர்த்துதானே ஆக வேண்டும்.

ஆரியர்களை உடன் வைத்துக்கொண்டு மூடநம்பிக்கை ஒழிப்பு சமூகநீதியை முன்னெடுக்க முடியுமா தமிழ் தேசியவியாதிகளே?

தமிழில் இருந்து பிரிந்ததுதான் மற்ற திராவிட மொழிகள் எனும் போது தமிழ்தேசியம் என்ற பெயரில் மற்ற திராவிடமொழிகள் பேசுபவர்களை பிரித்து பார்ப்பது என்பது திராவிட இனத்தை கூறு போடுவதாகாதா? வட இந்திய ஆரியர் ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை உரிமைக்குரல்களை நீர்த்துப் போகச் செய்யாதா? ஒரே இனத்தை சேர்ந்தவர்களையே கூறு போட வேண்டுமா?

ஒரே குடும்பத்தில் சகோதரர்களே சொத்துக்காக அடித்துக் கொண்டு கொலைகளே நடக்கிறது எனும் போது திராவிட நாடுகள் இடையே வரும் நதி நீர் பிரட்சினையெல்லாம் பெரிய விசயமா?

 தமிழ்ப் பேசுகிறவன் எல்லாம் தமிழன் ஆகிவிட முடியுமா?

வெளிநாடுகளில் வாழும் தமிழ்  பேசத்தெரியாத தமிழர்கள் தமிழர்கள் இல்லையா?

தமிழ் பேசும் வட இந்தியர்களை தமிழர்கள் என ஏற்குமா தமிழ்தேசியம்?

சமஸ்கிருதத்தை தேவபாஷையாக அதன் கலப்பு மொழியான இந்தியை தாங்கி பிடிக்கும்  தமிழில் பேசும் பார்ப்பணர்களை தமிழர்கள் என ஏற்க முடியுமா?

தமிழை திராவிட இனத்தை சிதைத்தது யார்?

தமிழ்மொழி சிதைவடைந்தே கன்னடம், தெலுங்கு, மலையாளம், வங்காளி, மராட்டி என மாறியதற்கு காரணம் ஆரிய சமஸ்கிருதம்தானே.

சாதியற்று வாழ்ந்த ஒரே திராவிட இனத்தில் தனது மொழியை திணித்து சாதிகளை உண்டாக்கி ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்தி இயற்கை தெய்வங்களை வணங்கிய திராவிடர்கள் மீது ஆரிய மதத்தை திணித்து அதன் அடிப்படையில் மூடநம்பிக்கைகளை உருவாக்கியது ஆரியம்தானே.

அந்த ஆரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து இன்றுவரை திராவிடர்கள் மீளவில்லையே.
மேலும் மேலும் திராவிடர்களின் மீதான அடக்குமுறைகள் அதிகமாகிவருகிறதே.

எனவேதான் திராவிடத்தின் தேவை ஆரிய அடக்குமுறைகளை எதிர்க்க இன்றும் தேவைப்படுகிறது.

என்று சமநீதியும் சம உரிமைகளும் எல்லோருக்கும் கிடைக்கிறதோ அது வரை திராவிடம் தேவைதான்.

Antony Parimalam

No comments:

Post a Comment