Monday 20 August 2018

விடுதலை புலிகள் தோற்றது எப்படி? 2006ல் அமெரிக்காவால் சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச ஆயுத கடத்தல்.

விடுதலை புலிகள் தோற்றது எப்படி? 2006ல் அமெரிக்காவால் சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச ஆயுத கடத்தல். 

புலிகளை முடக்கிய அமெரிக்க FBI

புலிகளின் ஆயுத கடத்தல் பொறுப்பாளர் ஸ்டீபன் என்பவர் இந்தோனேசியாவில் கைதாகிறார்

இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இதை அந்தநாட்டு காவல்துறையினர் அறிந்திருந்தனர். எனவே ஸ்டீபனும் புலிகள் அமைப்பை சேர்ந்தவராக என்ற சந்தேகத்தின் பெயரிலேயே அவரை தடுத்து வைத்தபடி சர்வதேச போலிசாரின் உதவயை நாடியிருந்தனர்.

உலகம் முழுதும் புலிகளுக்காக ஆயுத பேரத்தில் தொடர்புடைய அனைவருடைய விபரங்களையும் அவர்கள் வாங்க இருக்கும் ஆயுதங்களின் விபரங்களையும் சேகரித்தவர்கள் உடனடியாக யாரையும் கைது செய்யவேண்டாம் என முடிவெடுத்தார்கள்.

காரணம் இவர்களை கைது செய்தால் புலிகள் அமைப்பு உடனடியாக உசாரடைந்து வேறு புதியவர்களை நியமித்து தங்கள் வேலைகளை தங்குதடையின்றி செய்துகொண்டே இருப்பார்கள்.

எனவே அவர்களது சர்வதேச கடத்தல் வலையமைப்பை மீண்டும் கட்டியமைக்க முடியாத விதத்தில் அதனை முற்றாக அழித்து விடுவது தான் அவர்களது நோக்கம்.

அதற்கான திட்டத்தை வகுத்தார்கள்.

ஆயுத பேர வலையமைப்பில் இயங்கியவர்களில் அமேரிக்கா, கனடா நாடுகளில் வசிப்பவர்களே அதிகமாக இருந்ததால் அமெரிக்காவின் எப் .பி. ஐ. மற்றும் கனடாவின் சி .எஸ்.ஐ .எஸ் அதிகாரிகள் இணைத்து புலிகளின் சர்வதேச ஆயுதக் கடத்தல் வலையமைப்பை அழித் தொழிக்கும் திட்டத்தை வகுத்தவர்கள்.

தங்களுக்கு உதவியாக ஐரோப்பிய காவல்துறையினரின் உதவியையும் நாடியிருந்தார்கள்.

அதே நேரம் ஸ்டீபன் இந்தோனேசியாவில் கைதாகி அமெரிக்க அதிகாரிகளிடம் கையளிக்கப் பட்ட விடயம் புலிகளின் தலைமைக்கு தெரிந்திருக்கவில்லை.

அப்படியொரு சம்பவமே நடக்காத மாதிரி ஸ்டீபனை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்து இயக்கியபடியே அவருக்கு அடுத்த கட்டத்தில் இயங்கிய

1) சதாஜன் சரசந்திரன்

2) சகிலால் சபாரத்தினம்

3) திருத்தணிகன் தணிகாசலம்

4) நடராஜா யோகராஜா

5) முருகேசு விநாயகமூர்த்தி

6) விஜய்சாந்தர் பத்மநாதன்

7) நாச்சிமுத்து சோக்கிடடீஸ்

ஆகிய ஏழு பேரும் சி.பி.ஐ யின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

இவர்கள் வாங்கிய ஆயுதங்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டு அவை சர்வதேச கடலை விட்டு முல்லைத்தீவு கடலுக்குள் நுழையும் போது இலங்கை அரசுக்கு கச்சிதமான தகவல்கள் வழங்கப்பட்டது.

இலங்கை கடற்படையும் வான்படையும் இணைந்து புலிகளின் ஆயுதக் கப்பல்களை துல்லியமாக தாக்கியழித்துக் கொண்டிருந்தார்கள்.

அத்தனை ஆயுதக்கப்பல்கள் அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கும்போதும் ஸ்டீபன் கைதான விடயம் புலிகளின் தலைமைக்கு தெரிந்து விடாதபடி இந்த கூட்டு நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய எப் .பி.ஐ அதிகாரிகள் பார்த்துக்கொண்டார்கள்.

புலிகளுக்கும் சந்தேகம் வரவில்லை.

அப்போதுதான் புலிகள் தங்கள் நீண்ட நாள் முயற்சியான குருஸ் ரக ஏவுகணைகளை வாங்கும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள்.

அதற்கிடையில் புலிகளின் ஒன்பது ஆயுதக் கப்பல்கள் இரண்டு சரக்கு கப்பல்கள் என பதினோரு கப்பல்கள் மூழ்கடிக்கப் பட்டிருந்தது.

இதற்கு மேலும் தொடர்ந்தால் புலிகள் வேறு வழிகளில் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள் எனவே இத்தோடு அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவரலாம் என நினைத்த அதிகாரிகள் ஏவுகணை வாங்க முகர்வர்களை தேடிக்கொண்டிருந்தவர்களிடம் தங்களை ஆயுதத் தரகர்கள் என்று சொல்லிக்கொண்டு அறிமுகமாகிறார்கள்.

ஏவுகணை வாங்கும் திட்டத்துக்கு டீல் போட லண்டனில் வாசித்த முருகேசு விநாயகமூர்த்தி என்பவரை வன்னியில் இருந்த காஸ்ட்ரோ நியமிக்கிறார்.

முருகேசு விநாயகமூர்த்தி ஏற்கனவே எப் பி ஐ யின் கண்காணிப்பிலேயே இருந்தபடியால் ஆயுத தரகர்கள் என்று சொல்லிக்கொண்டு லண்டனில் அவரை சந்திப்பதில் எப்.பி.ஐ யினருக்கு எவ்வித சிரமும் இருந்திருக்கவில்லை.

முருகேசு விநாயகமூர்த்தி ஒரு வைத்தியர் இவருக்கு வியாதிகள் பற்றி தெரியுமே தவிர விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணைகள் பற்றிய விபரங்கள் எதுவும் அறியாதவர்.

எதோ கோயம்பேடு மார்க்கட்டில் கத்தரிக்காய் வாங்குவது போலவே ஏவுகணைகளை வாங்கிவிடலாம் என்பதுபோலவே நினைத்து ஆயுதத் தரகர்கள் போல வந்திருந்த இரண்டு எப் பி ஐ அதிகாரிகளிடமும் ஏவுகணைகள், வான் எதிர்ப்பு துப்பாக்கிகள் என்பவற்றின் பட்டியல்களை கொடுத்துவிட்டு எங்கே எப்படி பெறலாம், பணத்தை எப்படி கை மாற்றுவது என்று கேட்கிறார்.

அடுத்த சந்திப்பில் சில ஏவுகணை மாடல்களை நேரடியாகவே காட்டுகிறோம் அவை இயங்கும் திறன் இந்த கட்லோக்கில் உள்ளது படித்துப்பாருங்கள்.

ஏவுகணை மாடலை நாங்கள் காட்டும் போது பாதிப்பணம் நாங்கள் சொல்லும் அக்கவுண்டுகளில் செலுத்திவிட வேண்டும்.

ஏவு கணைகள் உங்கள் கைகளுக்கு வந்ததும் மீதிப்பணத்தை செலுத்தி விடுங்கள் மீண்டும் சந்திப்போம் என விடை பெற்றவர்களிடம் ..அடுத்த சந்திப்பு எங்கே என்றார்.

அடுத்த சந்திப்பு அமெரிக்காவில் டெக்ஸ்சாஸ் மானிலத்தில் நாங்களே உங்களை தொடர்பு கொள்கிறோம் என்று விட்டு முகவர்கள் விடை பெற்றார்கள்.

அடுத்த சந்திப்புக்கான அழைப்பு வந்தது முருகேசு விநாயகமூர்த்தி அமெரிக்காவுக்கு பறந்தார்.

டேக்சாஸ் மாநிலத்தில் ஒரு பண்ணை வீட்டில் சந்திப்பு.

அதே இரண்டு பாகங்களாக பிரித்து எடுத்து வரப்பட்ட ஏவுகணை ஒன்றின் மாடலை பொருத்தி அவருக்கு முன்னால் வைத்தார்கள் முகவர்கள்.

விநாயகமூர்த்தியால் சந்தோசத்தை அடக்க முடியவில்லை ஒரு குழந்தையைப்போல் துள்ளிக்குதித்தவர் “தொட்டுப் பார்க்கலாமா” என்றதும் “ம் ..தாராளமாக ” என்றார்கள்.

ஆசை தீர தொட்டுத் தடவிப் பார்த்தவர் ஏவுகணை கிடைத்த மகிழ்ச்சியை உடனே வன்னிக்கு சொல்லிவிட நினைத்து கைத் தொலை பேசியை எடுத்தவருக்கு “மிஸ்டர் இங்கிருந்து எந்த தொலைபேசி அழைப்பும் வேண்டாம் உங்கள் தங்குமிடம் போனதும் தாராளமாக பண்ணிக்கொள்ளுங்கள் இப்போ பேரத்தை முடித்து விடலாம் என்றார்கள்”.

அவர்களாலேயே உருவாக்கப்பட்ட போலியான வங்கிக் கணக்குகளை கொடுத்து அதில் பாதிப் பணத்தை வைப்பிலிடும் படியும் ஏவுகணைகள் புலிகளின் கப்பலில் ஏற்றப் பட்டதும் மிகுதிப் பணத்தை செலுத்தி விடும்படியும் சொல்லி விடுகிறார்கள் .

அபோதுதான் விநாயகமூர்த்திக்கு ஒரு விடயம் நினைவுக்கு வந்தது புலிகள் அமைப்பு இதுவரை SAM ரக ஏவுகணைகளையே பயன்படுதியிருந்தார்கள்.

அதனை எவுவதட்காகவே சிலர் பயிற்ருவிக்கப் பட்டிருந்தனர்.

ஏவுகணைகள் மிகப் பெறுமதியானவை என்பதால் ஒன்றைக் கூட வீணடிக்க முடியாது.

எனவே அவற்றை சரியாகப் பயிற்சி எடுத்தவர்களால் இயக்கப் படவேண்டும் .

எனவே குருஸ் ரக ஏவுகணையை இயக்க உங்களில் ஒருவர் வன்னிக்கு சென்று சிலருக்கு பயிற்சியும் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சில நிமிடங்கள் யோசித்த முகவர்கள் பிரச்சனையில்லை ஒருவரை அனுப்பி வைக்கிறோம் ஆனால் பத்திரமாக அவரை வன்னிக்கு அழைத்துச்சென்று மீண்டும் இங்கு கொண்டுவந்து விடவேண்டும் என்றதும்.

அதெல்லாம் பிரச்சனையில்லை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று விடை பெற்றனர்.

தங்கும் விடுதிக்கு வந்ததுமே முதல் வேலையாக வன்னிக்கு காஸ்ட்ரோவுக்கு போனடித்து ஏவுகணை வாங்கிவிட்ட செய்தியை சொல்லிவிட்டு விரைவில் வன்னிக்கு வருகிறேன்.

தலைவரை நேரில் சந்தித்து ஒரு படம் எடுக்க வேண்டும் அதற்கான ஒழுங்குகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கும் போதே அறைக்கதவு தட்டப்பட தொலைபேசியை நிறுத்தி விட்டு கதவைத் திறந்தார்.

சி.பி.ஐ என அடையாள அட்டையை தூக்கி காட்டிய சிலர் அவரை இழுத்து விலங்கை மாட்டி அள்ளிப் போட்டுக்கொண்டு போய் ஒருவருக்கு முன்னால் நிறுத்தினார்கள்.

அவர் வேறு யாருமல்ல.. ஆயுத முகவர் போல பேரம் பேசிய அதே நபர் தான்.

இப்போதான் விநாயகமூர்த்திக்கு விடயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து அமேரிக்கா,கனடா, ஐரோப்பா என எங்கும் கண்காணிப்பிலிருந்த முப்பதுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப் படுகிறார்கள்.

அது மட்டுமல்லாது பல நாடுகளிலும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பல கப்பல்களும் பறிமுதல் செய்யப்படுகின்றது.

சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி, சர்வதேச காவல்துறையினருக்கு தண்ணி காட்டி, உளவுத்துறையினருக்கெல்லாம் உச்சி விளையாடிய புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பானது அமேரிக்கா தலைமையில் 2006 ம் ஆண்டு முற்று முழுதாக சிதைக்கப் பட்டு முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது.

அதன் பின்னர் வெளியே இருந்து ஒரு குண்டூசி கூட புலிகளுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை ..

வெளியே சர்வதேச நிலைமைகள் இப்படி இருக்கும்போது உள்ளே வன்னியிலும் புலிகளின் இராணுவக் கட்டமைப்பை உடைக்கும் வேலைகளையும் மேற்குலகம் செய்யத் தொடக்கி விட்டிருந்தது.

அது எப்படியென்றால் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்து பேச்சு வார்த்தைகள் தொடங்கியதுமே மக்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லிக் கொண்டு சில தொண்டு நிறுவனங்கள் (N.G.O) வன்னிக்குள்ளே காலடி எடுத்து வைத்தனர் .

இப்போவெல்லாம் என் ஜி ஓக்கள் என்றாலே ஒரு நாட்டின் உளவு நிறுவனத்தின் முகவர்கள் என்கிற நிலைமையாகி விட்டது.

காரணம் உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை இந்த என் ஜி ஓக்களின் ஊழியர்களாகவே அனுப்பி வைகிறார்கள்.

அப்படி பலர் வன்னிக்குள் நுழைந்ததும் மக்களுக்கு உதவியதை விட புலிகளின் தளபதிகள் முக்கிய உறுபினர்களை குறிவைத்து உதவத் தொடங்கினார்கள்.

சுனாமி தாக்கத்தின் பின்னர் உலகத்திலுள்ள அனைத்து என் ஜி ஓக்களும் வன்னிக்கு படையெடுத்தனர் .

இவர்கள் சுனாமியால் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வெறும் தரப்பாள்களும் பிளாஸ்ரின் கோப்பைகள் உணவுகள்.

படுக்க பாய்களை மட்டும் கொடுத்துக்கொண்டு புலிகளின் தளபதிகள் பொறுப்பாளர்களிற்கு கணணிகள் மடிக்கணிகள், கைத்தொலைபேசி அவர்கள் வீடுகளிற்கு மின்சாரம் பெற்றுக்கொள்ள ஜெனரேட்டர்கள் அல்லது இயற்கையில் சூரிய ஒளியில் மின்சாரம் பெறும் சோலார்கள் என சகல வசதிகளிற்கும் அவர்களை பழக்கப் படுத்திக்கொண்டிருந்தார்கள்.

காரணம் இன்னொரு சண்டை தொடங்கும் போது புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் இந்த வசதி வாய்ப்புக்களை துறந்து மீண்டும் கெரில்லாக்களாக காடுகளிற்குள் இறங்கி போராப் போய் விடக்கூடாது என்பதே இவர்களது நோக்கமாக இருந்தது.

அதே நேரம் சமாதான காலத்தில்  புலிகள் அமைப்பில் இணைக்கப் பட்ட வயதில் குறைந்த போராளிகள் புலிகள் இயக்க பொறுப்பாளர்களின் வீடுகளில் வேலைக்காக அமர்த்தப் பட்டிருந்தனர்.

அவர்களது வேலைகள் புலிகள் தளபதிகளின் பிள்ளைகளை பராமரித்தல் சமையல் செய்தல் அவர்களது துணிகளை துவைத்தல் என சம்பளமில்லாத தொழிலாளிகளாக புதிய போராளிகள் இருந்தார்கள்.

குழந்தைப் போராளிகளைப் பற்றி பக்கம் பக்கமாக அறிக்கை விட்ட மனிதவுரிமை அமைப்புக்களோ உலக நாடுகளோ இந்த குழந்தை போராளிகள் தளபதிகளின் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப் பட்டிருப்பவர்களைப் பற்றி வாயே திறக்கவில்லை.

காரணம் அது அவர்களிற்கு தேவையானதாக இருந்தது.

அதிகாரங்களிற்கு எதிராகப் போராடப் புறப்பட்ட ஒரு இயக்கம் அதே அமைப்பில் போராட வந்த போராளிகளை வீட்டு வேலைகளிற்காக அமர்த்தி அடிமைப் படுத்தத் தொடங்கியதை என்னவென்று சொல்ல??

இப்படி வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த போராளிகள் பற்றி ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு தளபதியிடம் கேட்டபோது இதுவும் போராட்டத்தின் ஒரு வடிவம்தான் என நகைச்வையாக பதில் சொல்லி நழுவிக்கொண்டார் .

நன்றி -சாத்திரி-

No comments:

Post a Comment